கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா!

கனடா பிரதமருக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையுடன் கொரோனா ஓய்ந்துவிட்டதாக உலக மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. கொரோனா நான்காவது அலை வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு, உலக அளவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா ஒருவழி செய்து வருகிறது.

இந்த நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தடுப்பூசி செலுத்தி இருப்பதால் பெரிய பாதிப்பு இருப்பதாக உணரவில்லை. எனவே இதுநாள்வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அதனை கண்டிப்பாக செலுத்தி கொள்ள வேண்டும்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடந்த 5 மாதங்களில் 2 ஆவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.