பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் முதல்வர் அலுவலகத்துக்கு அல்-காய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் முதல்வர் அலுவலகம் அம்மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு அல்-காய்தா பெயரில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், பிகார் சிறப்புக் காவல்துறையினரால் கூட அதைத் தடுக்க முடியாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் அலுவலத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக, அலுவலக அதிகாரி சஞ்சீவ் குமார் அளித்த தகவலின் பேரில் சஜிவாலயா காவல் நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிகாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.