ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டலால் பதட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புது வீடு ஒன்றைன கட்டி வந்தார். கடந்த ஜூலை 5ம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டினர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர். உடனடியாக ஆம்ஸ்ட்ராங் மீட்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது படுகொலை தமிழகம் முழுவழும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பொற்கொடி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி அவருடயை குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் மனைவி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் செம்பியம் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கறிஞர் ஆவார். ஆஸ்ட்ராங் படுகொலைக்கு பின் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.