காஷ்மீரில் கூடிய விரைவில் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர்!

ஜம்மு-காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. மேலும் மாநிலமானது, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசால் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

இந்த ஆய்வுக் குழுவில் தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர, தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து இடம்பெற்றுள்ளனர். இந்த ஆய்வு பயணத்தின்போது தேர்தல் ஆணையக் குழு, போலீஸ் டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் ஜம்முவில் நேற்று ராஜீவ் குமார் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது.
அதன்படி ஜம்மு-காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்தவேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் விரும்புகின்றனர். தேர்தலை முறியடிக்க நினைக்கும் சக்திகளை காஷ்மீர் மக்கள் தோற்கடிப்பர். தேர்தலை நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.