காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ராணுவத்தினர், ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இரு தரப்பிற்கும் பல மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.