அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையம்!

நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் தவிர்த்த மற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது.

அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும்.

வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களைப் பெற்று இணைத்தல், உரிய பாக எண் அடிப்படையில் அதற்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அக்.19 முதல் 28-ம் தேதி வரை, உரிய படிவங்களைத் தயாரித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன்பின், அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அன்று முதல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணியை தொடங்க வேண்டும். நவ.28-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை டிச.24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, தரவுகளை முழுமை செய்து வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, துணைப்பட்டியலை அச்சிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும்.