பீகாரில் பாபா சித்தநாத் கோயிலில் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு!

பீகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.

பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பாபா சித்தநாத் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் திவாகர் குமார் விஸ்வகர்மா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.

கோவிலில் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.