முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு!

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உத்தரவிட்டார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. திண்டிவனம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரித்தார் . அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டுமெனவும், ஆனால் திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக்கூறிய நீதிபதி, ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியல் தளத்தில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியது மற்றும் போராட்டம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உத்தரவிட்டார்.