எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்: துரைமுருகன்

“எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்த நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக இன்று (ஆக.26) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், “அவர் (துரைமுருகன்) மிகப் பெரிய தலைவர், என் நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. எங்கள் நட்பு நீடிக்கும்” என்று கூறினார். தொடர்ந்து விஜய் கட்சி கொடி, பாடல் அறிமுகம் குறித்த கேள்விக்கு, “அவருக்கு வாழ்த்துகள்“ என்றார்.

ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதையேத்தான் நானும் சொல்கிறேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதன் மூலம் ரஜினி விமர்சனம் மற்றும் துரைமுருகன் பதிலடி தொடர்பான சர்ச்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.