தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின் போது காவல் துறை திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். குறிப்பாக 17 வயதான மாணவி ஸ்னோலின் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி, காவல் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை என்றும் அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்னோலின் தாயார் வனிதா மனுதாக்கல் செய்தார். அதில், “துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைத்த காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், “சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதால் இந்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. எனினும், நீதிபதிகள் மனுவில் உள்ள மற்ற கோரிக்கைகள் தொடர்பாக கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன், வழக்கு விசாரணையும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.