காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்: அமைச்சர் துரைமுருகன்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை. ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதால் வரும் 100 ஆண்டுகளுக்கு என் பெயரைச் சொல்லும்.

நான் என்னுடைய தொகுதியை கோவிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில். என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றி உள்ளவனாக இருப்பேன். என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதி பெயர் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் போகும். என்னை வளர்த்தவர்கள் நீங்கள் தான். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக கூறினார்.