மாநில பாடத்திட்டத்தில் எழுத படிக்கத் தெரியாத மாணவர்கள்: வானதி சீனிவாசன்

மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், AI தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை வழக்கபோல் திரித்துப் பேசி மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரசியலாக்க முயற்சித்திருப்பதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என பேசியதாக புகார் எழுந்துள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும், முன்னாள் துணைவேந்தர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அந்த வகையில் ம்துரை எம்பி சு.வெங்கடேசனும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு” என கூறியிருந்தார்,

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதை வழக்கபோல் திரித்துப் பேசி மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரசியலாக்க முயற்சித்திருப்பதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த காலத்திலிருந்தே, மாநில பாடத்திட்டங்கள் மீது கடும் விமர்சனங்கள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளன.
மாநில பாடத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளின் காரணமாகவே, இன்று தமிழகத்தில் நிறைய தனியார் பள்ளிகளும், CBSE பாடத்திட்டத்தை நோக்கி நகரும் பெற்றோர்களும் அதிகரித்துள்ளனர் என்பது பலகாலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் ஒலித்துவரும் கவனிக்கத்தக்க விமர்சனமாகும்.

ஆனால், தமிழகத்தின் நலன்சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதை சீர்தூக்கிப் பார்த்து சரி செய்து கொள்ளும் பக்குவம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இல்லை என்பதும்,
அதையும் மீறி விமர்சிப்பவர்கள் தமிழக ஆளுநர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய்வதும், தமிழக அரசியல் தரத்தினை தாழ்த்திவிடும் என்பதை நீங்கள் சற்று உணரவேண்டும்.

* மாநிலப் பாடத்திட்டத்தின் புகழ்கவி பாடும் உங்களுக்கு, தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப்படிக்க கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியுமா?

* தமிழகத்தில் ஆசிரியர்களின்றி பல அரசுப்பள்ளிகள் இயங்கும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பதை எவ்வாறு உறுதி செய்யமுடியும்?

* உங்கள் கூட்டணிக் கட்சியான திமுக, “மாநிலக் கல்விக் கொள்கை” கொண்டுவரப்படும் என்று கூறி, 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே, இதுவரை அதைப்பற்றி எதாவது கேள்வி எழுப்பியுள்ளீர்களா?

* உங்களுக்குப் பிடித்தமான கட்சி ஆட்சியில் இருப்பதால், அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் இந்த அநீதி அரசைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறீர்களோ?

* தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இத்துனை அவலங்கள் நடக்கையில், மாநிலப் பாடத்திட்டம் தரம் குறைந்து கொண்டிருக்கிறது, அதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி கற்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

* ஈவேரா பெரியாருக்கு போலி யுனெஸ்கோ விருது கொடுத்தும், கட்டணம் செலுத்தி பெறப்பட்ட அஞ்சல் தலையை ஆஸ்திரிய நாடு தானே முன்வந்து திரு.கருணாநிதி அவர்களுக்கு கொடுத்த மரியாதை என்றும் போலி விளம்பரம் செய்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, வீர சாவர்க்கர் குறித்தும், பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை என்பதை பணிவுடன் கூடிய எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, வீர சாவர்க்கர் மற்றும் மாண்புமிகு பிரதமர் ஆகியோரைப் பற்றி தமிழ் பாடத்திட்டத்தில் இல்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் திரு. சு.வெங்கடேசன் அவர்களே, நேர்மையான ஊழலற்ற அத்தலைவர்களைப் பற்றி தமிழக மாணவர்கள் உட்பட உலகமே படித்தும் பார்த்தும் வியந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.