பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்.11 வரை இலங்கையில் காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று கைது செய்தனர். இதனையடுத்து 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (செப்.4) நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்கள் 35 பேருக்கும் செப்.11-ம் தேதி வரை மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 35 பேரும் வாரியாபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.