மருத்துவத் துறையில் பிரிக்க முடியாத அங்கம் இயன்முறை மருத்துவம்: செல்வப்பெருந்தகை!

உலக இயன்முறை மருத்துவ தினம் நாளை (செப்.8) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, “மருத்துவத் துறையில் பிரிக்க முடியாத அங்கமாக இயன்முறை மருத்துவம் விளங்கி வருவதாக” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இன்றைய மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சைக்கு பிறகும் மற்றும் உடலில் வயது முதிர்வின் காரணமாக ஏற்படுகிற பாதிப்புகளை களைவதற்காக இயன்முறை மருத்துவம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. மருத்துவ சிகிச்சை பெற்ற பலர் தங்களது மறுவாழ்விற்கும், தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதற்கும் இயன்முறை மருத்துவம் மிக மிக அவசியமாகி வருகிறது.

மருத்துவத் துறையில் பிரிக்க முடியாத அங்கமாக இயன்முறை மருத்துவம் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக இயன்முறை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலவித பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு குறிப்பாக நடுத்தர முதியோர்களுக்கு மிக சிறப்பாக இயன்முறை மருத்துவம் செய்கிற அனைத்து மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.