பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து: இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு!

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக சமயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி 3-வது குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திரைப்பட இயக்குநரும், பாமக பிரமுகருமான மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

பஞ்சாமிர்தம் குறித்து இயக்குநர் மோகன் ஜி அவதூறு கருத்து பரப்பியதாக திருச்சி, சமயபுரம் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் மேலாளர் கவியரசு அளித்த புகாரின் பேரில், ஐந்து பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து திருச்சி எஸ்பி வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை ராயபுரத்திலிருந்த இயக்குநர் மோகன் ஜி-யை சமயபுரம் போலீஸார் நேற்று காலை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பாலாஜி (பொறுப்பு), “குற்றமும், அதற்காக பதியப்பட்ட வழக்கும் சரியானது. இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், போலீஸார் முறையான கைது நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக” உத்தரவிட்டார்.

போலீஸார் நேற்று மாலை 3 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று நேற்று முன்தினம் (செப்.23) மோகன் ஜி-க்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில், போலீஸார் கொடுத்தக் கெடுவுக்கு முன்னதாகவே மோகன் ஜியை கைது செய்து அழைத்து வந்திருந்தனர். இதுவே அவர் சொந்த ஜாமீனில் நீதிமன்றம் விடுவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.