அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு!

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் அமைச்சராக இருந்த போது வருமானத்தை விட சுமார் ரூ. 33 கோடி கூடுதலாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது இப்போது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனம் சென்னை அடுத்துள்ள பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட அனுமதி கோரியது. இதற்காக அந்த நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பித்து இருந்தது. கடந்த 2013ல் இந்த நிறுவனம் விண்ணப்பித்த போதிலும் சுமார் 3 ஆண்டுகள் அத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் 2016ம் ஆண்டு திடீரென அத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த அனுமதி வழங்க அப்போதைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு மிகப் பெரிய தொகை லஞ்சமாகத் தரப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக உள்ள வைத்திலிங்கம், ஒரத்தநாடு எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.

இது தொடர்பாக அவர்கள் விரிவான புகாரையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்துள்ளனர். அதில் வைத்திலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்திற்குக் கடன் போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.27.9 கோடி தரப்பட்டதாகவும் அந்த நிறுவனம் திடீரென கடனை திருப்பி தரமுடியவில்லை என்று நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சி பாப்பகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. அதில் அறப்போர் இயக்கத்தின் புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தனியார் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது சொத்துக் குவிப்பு வழக்கை இப்போது பதிவு செய்துள்ளது. கடந்த 2011 – 2016 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.