பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை!

பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தியதுடன், நெசவாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.25) காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார்.

இதையடுத்து, கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வான 6 விருதாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ,20 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.

சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.2.25 லட்சத்துக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர்கள் பங்கேற்றனர்.