தமிழ்நாடு முழுவதும் அறிவு புரட்சியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி வருகிறார்: தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு முழுவதும் அறிவு புரட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார் என்று விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது புத்தக திருவிழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் “மரமும், மரபும்”- என்ற பொருண்மையின் கீழ், நடைபெற்ற விருதுநகர் 3வது புத்தக திருவிழாவை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். இராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் பிரபலமான பதிப்பாளர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட புத்தக அரங்குகள் மற்றும் உணவு அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்கள் வாங்கும் மாணவ மாணவிகளுக்கு 20% புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும்.

புத்தகத் திருவிழாவில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

முன்னொரு காலத்தில் நாகரிகத்தினுடைய தொட்டில் வெம்பக்கோட்டை வைப்பாறாக இருந்திருக்கின்றது.
மேலும் கீழடி நாகரீகம் உருவாகுவதற்கு முன்பாகவே கூட நம்முடைய வைப்பாற்றிலே, அது உருவாகி இருக்கிறது. பெருங்கற் காலத்தினுடைய ஈம சின்னங்கள், வரலாற்றுக் கால சின்னங்கள் இவையெல்லாம் தொடர்ச்சியாக வரலாற்றில் இடம் பெறக்கூடிய ஒரு மாவட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய விருதுநகர் மாவட்டம் தான்.

மேலும் அந்த விருதுநகர் மாவட்டத்தின் உடைய தொன்மையை அதனுடைய வரலாற்றை, நாம் குறிப்பிடக்கூடிய அந்த காலம் தொடங்கி அண்மைக்கால வரலாறு வரை நிறைந்திருக்க கூடிய இந்த விருதுநகர் மாவட்டத்தினுடைய செழுமையை அதனுடைய தொன்மையை, மரபை அதனுடைய சூழலியல் தொன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட கூடிய வகையில் மிகச் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழா அமைந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் அறிவு புரட்சியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசிய போது, “புத்தகங்களில் தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றாற்போல புத்தகங்களை வடிவமைத்து இருப்பார்கள். அதனை பார்க்கும் நேரத்தில் நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும். நமக்கு நல்ல அறிவு வளரும். நாம் பிறரிடம் பேசும் பொழுது நாம் அறிவாளியாக, திறமையானவனாக காட்ட வேண்டும் என்றால் புத்தகத்தை வாசித்தால் மட்டும் தான் அது நடக்கும்” என்றார்.