அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜ முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமலாக்கத்துறை, பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூரு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று நிர்மலா சீதாராமன் மீது ஐபிசி 354, 120பி மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை 2வது குற்றவாளியாகவும், பாஜ முன்னாள் தேசிய தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா 3வது குற்றவாளியாகவும், பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் 4வது குற்றவாளியாகவும், 5வது குற்றவாளியாக பாஜ மாநில தலைவர் விஜயேந்திராவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.