காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்குகளை வீணாக்காதீர்: மாயாவதி

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஹரியாணாவில் நடந்துகொண்டிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான காங்கிரஸின் தொடர்ச்சியான புறக்கணிப்பும், அவமதிப்பும் புலப்படுகிறது. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் என்ன நடக்கும்? இதுபோன்ற சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் காங்கிரஸ், பாஜக போன்றவற்றுக்கு வாக்களித்து அதை வீணாக்க வேண்டாம்.

எப்பொழுதும் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் இப்போது நேரத்திற்கு ஏற்றாற்போல இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் எனப் பேசுகிறார்கள். எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும், அரசியலமைப்பு உரிமைகளையும் வழங்கப் போராடும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் காங்கிரஸ், பாஜக அல்லது வேறு எந்த கூட்டணிக் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல், தலித் விரோத வரலாற்றை மனதில் வைத்து பகுஜனுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.