சென்னையில் நாளை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை!

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அக். 1-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமானப்படை தின அணிவகுப்பு – 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அக். 1-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.