காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்களா? ஆளுநர் ரவி வருத்தம்!

காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, மது பாட்டில்களைக் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் ஆளுநர் ரவி, சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் வெகுஜன தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, தன்னார்வலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்திய தலைவர். தூய்மைப்படுத்துதல் என்பது கடவுளுக்கு நாம் செய்யும் சேவைக்கு சமம். தூய்மைப்படுத்துதலை ஒரு பழக்கமாக நாம் மாற்ற வேண்டும். தூய்மைப் பணியை மாதத்தில் ஒரு முறையாவது கடைபிடிக்க வேண்டும் என்று பல பல்கலைக்கழகங்களில் வலியுறுத்தியுள்ளேன். காந்தி மண்டப வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது சில மது பாட்டில்களையும் பார்த்தேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, இந்த செயல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.