தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.!

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

விருதுநகரில் காமராசர் நினைவு தினம், காந்தி ஜெயந்தி தினத்தை ஒட்டி காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலை, ரயில்வே ஜங்ஷனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது போடப்பட்டுள்ள வழக்கு பாஜக செய்த சதி. இந்த வழக்கு சித்தராமையாவை அவமானப்படுத்துவதற்கும், அவரது அரசியல் வாழ்விலே பொய்யான குற்றச்சாட்டை அமலாக்க துறையை வைத்து பாஜக மத்திய அரசு புனைந்த வழக்கின் விளைவாக வந்த பிரச்சனை. இதை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சியும் சித்தராமையாவும் எதிர்கொள்வோம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசாக செயல்படுகிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சர் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக தெரிகிறது. சட்ட பரிவர்த்தனை கண்காணிக்க கூடிய அதிகாரிகளும் எதிர்க்கட்சிகள் மீது பாய்வதிலேயே குறியாக இருக்கின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாக இருந்து வருவது மது ஒழிப்பு கொள்கை. அரசியல் பலம் வேறு, கொள்கை ஈடுபாடு வேறு.

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் மீது பாரா முகமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான போதிய உறுப்பினர்கள் பாஜகவிடம் இல்லை. எனவே தீர்மானம் நிலை குழுவுக்கு செல்லுமே தவிர மசோதா நிறைவேறாது.

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பாஜகவின் ஊது குரலாக இருந்து வருகிறார். பாஜக என்ன மத அரசியலை செய்ய விரும்புகிறதோ அதை பவன் கல்யாண் செய்ய விரும்புகிறார். இதை ஆந்திர மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.