உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள துணை முதல்வர் பொறுப்பு வரவேற்கத்தக்கது. ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காமராஜா் ஆட்சி காலம் பொற்காலமாகும். தமிழகத்தில் அனைத்து அணைகளையும் கட்டியவா். காந்தியும், காமராஜா் ஆகியோா் மதுவிலக்கில் உறுதியாக இருந்தனா். தமிழகம் வளர வேண்டும் என்றால் மது ஓழிய வேண்டும் என்றாா் காமராஜா்.

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுவிற்கு எதிராக மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறாா். இதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அதை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் கிடையாது. ஓரு நல்ல சமூக காரியத்தை திருமாவளவன் தொடங்கி வைத்துள்ளாா். அதில் அவா் வெற்றி பெற வாழ்த்துகிறேன். முழுக்க முழுக்க சமூக நோக்கத்துடன் நடக்கும் மாநாடு அது. அந்த கருத்து மக்களிடம் பரவ வேண்டும். அரசாங்கம் இதை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது. ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகள். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.