ஈரானின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடல்!

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவா் நபீல் கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் உயிரிழந்தனா்.

கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனீயே ஈரானில் உயிரிழந்தனா். ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து வந்தது.

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.எனினும், அது முழுமையான படையெடுப்பாக இல்லாமல் குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருந்தது. இதனிடையே, இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிா்கொள்ளத் தயாா் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவா் நயீம் காஸிம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ஈரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்த நிலையில், அதுகுறித்து முன்னரே அமெரிக்காவும் எச்சரித்து இருந்தது. அதன்படி, தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ஈரான் எச்சரித்தது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, வான் எல்லைகள் மூடப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன.

ஈரான் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். உலகின் அதிநவீன இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்திவிட்டது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்புக்கு, எத்தகைய தாக்குதலையும் வலிமையாக எதிர்கொள்வோம் என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும் நாளை வியாழக்கிழமை காலை(அக்.3) வரை ஈரானில் அனைத்து விமானங்கள் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா, ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத் தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜூலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனீயேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் படை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 400-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை ஈரான் தாக்கியது. மேலும், இந்த தாக்குதல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கை என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்ட ஈரான் அதிபர் மசூத் பிசிஷ்கியான், ஈரானின் வலிமை குறித்த முன்னோட்டம்தான் இது, ஈரானுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பிற நாடுகள் போருக்குள் நுழைந்தால், அடுத்த கட்டத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஈரான் ஆயுதப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி வெளியிட்ட அறிக்கையில், மூன்று இடங்களை குறிவைத்து ’ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ் – 2’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பல்வேறு தாக்குதலை திட்டமிட்டு நடத்தும் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைமையகம், அமெரிக்காவின் எஃப் 35 மற்றும் எஃப் 15 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெவடிம் விமானத் தளம் மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஹட்செரிம் விமானத் தளம் ஆகியவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், தாக்குதலுக்கு உள்ளான நெவடிம் விமானத் தளமானது, 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நான்கு ஓடுபாதைகளை கொண்ட மிகப் பெரிய விமானத் தளமாகும். இங்கு அமெரிக்கா தயாரிப்பான எஃப் 35 ஸ்டெல்த் அதிநவீன போர் விமானங்கள், சி-130 போக்குவரத்து விமானங்கள், போயிங் 707 டேங்கர் விமானங்கள், உளவு விமானங்களுடன் மூன்று படைப் பிரிவுகளுடன் செயல்படுகிறது.

இந்த நிலையில், நெவடிம் தளத்தை 20 முதல் 30 பலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் பெருமளவு சேதமடைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது செலுத்தப்பட்ட ஏவுகணைகள் 90 சதவிகிதம் வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்ததாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபத்தா-1 என்ற ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பயன்படுத்தியதாகவும், இதனை வழிமறித்து தாக்குவது மிகுந்த சவாலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளவில் மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.