அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் 20 வரை பொதுக்கூட்டங்கள்!

அதிமுக, அக்.17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு, 17-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு, 17-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திராஉள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

அதன்படி, 17-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்.17-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 20-ம் தேதி திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் நான் பங்கேற்று உரையாற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.