பாஜகவை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியின் துணிச்சல்: செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், அவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. 99 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றார். பாஜகவுக்கு எதிராக மக்களவையில் தீவிரமான வாதங்களை முன்வைத்து வருகிறார் ராகுல். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம், இந்தியா கூட்டணி சார்பாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்களை ராகுல் காந்தி நிறைவு செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த கால மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு வந்தது என்ற அவர், மக்களவை தேர்தல் தீர்ப்பின் மூலம் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது என்றும், எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி அவர்கள் மக்களவையில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று குறிப்பிட்டதோடு ராகுல் காந்தி எழுப்பிய பிரச்னைகள் குறித்தும் விரிவாக செல்வப்பெருந்தகை பட்டியலிட்டார்.

தொடர்ந்து, “தற்போது இந்திய அரசியலில் நிலவுகிற அசாதாரண சூழ்நிலையில் பாஜகவினுடைய அடக்குமுறைகளை எதிர்கொள்வது எளிதான காரியமல்ல. ஆனால், எதற்கும் அஞ்சாமல் பாஜக அரசின் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத் துறை மூலம் ஏவிவிடப்படுகிற தாக்குதல்களை எதிர்கொள்கிற துணிச்சல் தலைவர் ராகுல்காந்திக்கு இருப்பதை நாடே பார்த்து வியந்து பாராட்டுகிறது” என்றும் கூறினார்.

இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற காவலனாக எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் தலைவர் ராகுல்காந்தி செயல்படுகிறார் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொடர்ந்து மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.