தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை ட்விட்டரில் கனிமொழி தெரிவித்துள்ளார்: எல்.முருகன்

“தமிழக அரசிடம் விமானத் துறை அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கேற்றார்போல் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை ட்விட்டரில் கனிமொழி தெரிவித்துள்ளார்” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னை மெரினாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. விமானப் படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கேற்றார்போல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிக்கிறது. இது சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை உரிய எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காஷ்மீர், ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அங்கு சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 70 ஆண்டுக்குபிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “விமான கண்காட்சிக்கு சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கனிமொழியின் ட்விட்டர் கருத்து” குறித்த கேள்விக்கு, “தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் ட்விட்டரில் சொல்லி தெரிவித்திருக்கிறார். அதை வரவேற்கிறேன்” என்று எல்.முருகன் கூறினார்.