உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் டி ஷர்ட் இல் சின்னம் மற்றும் கொடி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல: தமாகா!

“உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் டி ஷர்ட் இல் சின்னம் மற்றும் கொடி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இது அரசு மாண்பை அவமானப்படுத்தும் செயல்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவராஜா இன்று (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக துணை முதல்வராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்து வருவது ஏற்புடையதல்ல, உதயநிதி தனது உடை விஷயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நாட்டில் ஒரு உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அமைச்சர் அதுவும் துணை முதல்வர் இப்படி அணிவது ஏற்க முடியாது. அமைச்சர்கள் அரசு அலுவலர்கள் நமது பாரம்பரிய உடை அணிந்து அலுவலக பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அரசாணை உள்ளது.

பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (A) துறை அரசாணை G.O.(Ms).No.67 தேதி: 01.06.2019 அத்தியாயம் XXII இல், “அலுவலக நேரம், விடுப்பு, முதலியன” என்ற தலைப்பின் கீழ், பத்தி 541 இல், பிரிவு (b) (1) இல் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணையில் ஆண்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் டி-ஷர்ட் அணிந்து வருவதை நான் குறை சொல்லவில்லை ஆனால் அரசு பணிகளில் ஈடுபடும் போது அந்த டி-ஷர்டில் திமுக சின்னம் கொடி பயன்படுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கட்சி நிகழ்ச்சிக்கு அவர் இவ்வாறு சென்றால் அது அவரது தனிப்பட்ட விஷயம். டி ஷர்ட் பாரம்பரிய உடையா? பொறுப்பான அரசு பதவியில் உள்ளவர் கட்சியின் சின்னத்தை போட்டு அரசு நிகழ்ச்சிக்கு டி ஷர்ட் போட்டு செல்லலாமா? நீங்கள் இப்படி செல்லும்போது ஒரு நீதிபதி அவருக்கென்று உள்ள பிரத்தியேக உடையில் செல்லாமல் உங்களைப் போல் சென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உங்களைப் போன்று இப்படி டி-ஷர்ட் அணிந்து சென்றால் பொது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? நமக்கென்று ஒரு கலாச்சாரம் மரபு உள்ளது அதை காப்பாற்ற வேண்டுமே தவிர குழி தோண்டி புதைக்க கூடாது. அரசு பதவியில் உள்ளவர்களுக்கு மரபு ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதில் நாம் தவறு பண்ணக்கூடாது. டி ஷர்ட் போட்டு அதில் கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி மாற்றி கொள்ள வேண்டும்.

கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் இரட்டை இலை சின்னம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உங்கள் கட்சியின் சட்டப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார். அவர்கள் ஏதோ நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போல் இறக்கை அமைத்ததற்கே அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள் வழக்கு தொடுத்தீர்கள். ஆனால் நீங்கள் போகும் இடங்களெல்லாம் உங்கள் கட்சி கொடி சின்னம் குறித்த டி-ஷர்ட் உடன் வலம் வருகிறீர்கள் இது நியாயமா?

பொறுப்பில் உள்ள நீங்களே இப்படி இருக்கும் போது ஒரு மாணவனோ ஒரு மாணவியோ கல்லூரியிலோ அரசு பணியிலோ தனியார் பணி செல்லும்போது அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிந்து செல்லும் போது நமது கலாச்சாரமும் நாகரிகம் சீரழியுமே தவிர வளராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.