இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை: ஃபரூக் அப்துல்லா!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் சம்பல் பகுதியில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை. இந்தியாவில் உள்ள 24 கோடி முஸ்லிம்களை கடலில் தூக்கி எறிந்துவிட முடியாது. முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும். வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்துவதை மத்திய பாஜக அரசு நிறுத்த வேண்டும். அரசியல் சாசனத்தையே வஞ்சித்தால் இந்தியா எப்படி இருக்கும்?

காஷ்மீர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு திரும்பி வருவதை இங்கு எந்த அரசியல்வாதிகளும் தடுக்கவில்லை. நாங்கள் ஆதரிக்கவே செய்கிறோம். அவர்களுக்காக எங்கள் இதயத்தை திறந்தே வைத்திருக்கிறோம். நான் முதல்வராக இருந்தபோது, நிலைமை மோசமான சூழ்நிலையில் அவர்களை மீட்க முயற்சி செய்தோம்.

ஜம்மு-காஷ்மீரில் இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்யப்படும். அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மேலே வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.