குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம்: டி.டி.வி. தினகரன்

பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி பாதிப்புக்குள்ளான 30-க்கும் அதிகமானோர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.

பருவமழைக் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீரைக் கூட முறையாகவும், சுத்தமாகவும் விநியோகிக்கத் தவறிய தாம்பரம் மாநகராட்சி மற்றும் தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மாநகராட்சி மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார் மனுக்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே இன்று விலைமதிப்பில்லாத இரண்டு உயிர்களை இழக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, பல்லாவரம் பகுதி முழுவதும் மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.