அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது!” என்று கற்பித்த புரட்சியாளர்!

“அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடிவரும்!” என்ற பேரறிஞர்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை!

“நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை!” என்று முழங்கிய சமத்துவ நாயகன்!

“சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது!” என்ற புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!

இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார்.

பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம்.

சாதி-மதப் பிளவுகள்தான் சமநிலைச் சமூகம் அமையவிடாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்தாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அண்ணல் அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறியுள்ளதாவது:-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அழிக்கவே முடியாத கறை படிந்த நாள்!

இந்த நாட்டில் வாழும் இசுலாமியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்ட நாள்!

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்ப்பற்ற முகப்புப் பக்கம் கிழித்தெறியப்பட்ட நாள்!

உலக அரங்கில் பெருத்த அவமானத்தைச் சுமந்து இந்தியப் பெருநாடு தலைகுனிந்த நாள்!

இந்த நாட்டின் ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டு ஒற்றுமை சீர்குலைந்த நாள்!

வேற்றுமையில் ஒற்றுமை வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, இந்தியாவின் பன்முகத்தைப் பலிகொடுக்கப்பட்ட நாள்!

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டலாம்! ஆனால், உடைக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் மனங்களை, இந்த நாட்டின் மீதான அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாது..!

என்றைக்கு இந்த நாட்டின் நீதிமன்றங்களில் தீர்ப்புக்கு பதிலாக நீதி வழங்கப்படுகிறதோ அன்றைக்குதான் இந்த நாடு உண்மையிலேயே மக்களாட்சி நாடாக இருக்கும்!

இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, அயோத்தி மண்ணில் நிரந்தரமாய்ப் புதைக்கப்பட்ட கருப்புநாள் இன்று! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.