தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?: எச். ராஜா!

ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச். ராஜா காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:-

இந்துக்களின் ரூ. 1,185 கோடி நன்கொடையில்தான் கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் நன்கொடையில் கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுவதாய் அமைச்சர் கூறுகிறார். தங்கள் பக்தியின் காரணமாக அவரவர் கும்பாபிஷேகம் நடத்தினால், அதையும் அறநிலையத்துறை தட்டி பறிக்குமா? அறநிலையத்துறை எதற்காக உள்ளது? தமிழ்நாட்டில் இந்து விரோத அரசுதான் நடக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பதாக முதல்வரின் தந்தையே நெஞ்சுக்கு நீதியில் கூறியுள்ளார். தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?

ஒன்றரை மாதத்திற்கு முன்னரே, சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மற்ற மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தேன். ஆனால், தற்போது விழுப்புரம், திண்டிவனம், கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் வரையில் சேதத்திற்கு ஆளாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, மறைந்த அவரது தந்தை கருணாநிதி கடிதம் எழுதுவதுபோல சித்திரிப்பு பதிவையும், எச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.