மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலை பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

ஷாலோம் ஹமாஸ் என்றால் ‘ஹலோ’ அல்லது ‘குட்பை’ என்று அர்த்தம். விருப்பத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இப்போதே உங்களிடம் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் உங்களால் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். மனநிலை பிறழ்ந்த நோயாளிகள் தான் உடல்களை தங்களுடன் வைத்திருப்பர். நீங்களும் மனநிலை பிறழ்ந்த நோயாளிகள்தான். அனைத்தையும் முடிக்க தேவையான எல்லா உதவிகளையும் நான் இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன். நான் கூறியபடி நீங்கள் செய்யாவிட்டால், ஹமாஸ் குழுவில் ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்கமுடியாது

உங்களால் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட உங்களின் முன்னாள் பிணைக் கைதிகளை நான் இப்போது தான் சந்தித்தேன். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை! காசா மக்களைப் பொறுத்தவரை உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஹமாஸ்கள் காசாவை விட்டு வெளியேறும் நேரம் இது. நீங்கள் யாரையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். சிறந்த முடிவை எடுங்கள். இப்போதே பிணைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் அல்லது அதற்காக பின்னர் கூலி கொடுக்க வேண்டியது இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பிணைக் கைதிகள் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் ஆடம் போஹ்லர், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ்களுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியது என்பதை உறுதி செய்த பின்பே அதிபர் ட்ரம்ப் இவ்வாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பேச்சுவார்த்தை குறித்து நெதன்யாகுவுடன் முன்கூட்டியே விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளன. ஹமாஸ்வசம் மீதமுள்ள பிணைக் கைதிகளில் ஐந்து அமெரிக்கர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம், ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும், காசா மக்கள் மீதான முற்றுகையை, பட்டினியைத் தீவிரப்படுத்த முயலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவு அளிப்பதேயாகும் என்று தெரிவித்துள்ளது.