கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாலத்தீவில் மக்கள் போராட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாகவே மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து தப்பியோடினார். அவர் மாலத் தீவுக்கு சென்றுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கே திருப்பியனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.