அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க “கோல்டன் டோம்” திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கூறியதாவது:-
வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில் “கோல்டன் டோம்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 175 பில்லியன் டாலர் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்கு 25 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யும் மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. எனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்த கோல்டன் டோம் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது இலக்கு.
கோல்டன் டோம் திட்டத்தில் சேர கனடாவும் ஆர்வம் காட்டியுள்ளது. இந்த முயற்சியில் அமெரிக்கா அதன் வடக்கு அண்டை நாடுகளை ஆதரித்து செயல்படும். தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.