மைக்ரோசாப்ட்டில் 1800 ஊழியர்கள் நீக்கம்! கூகுளில் ஆட்குறைப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும் இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் பல்வேறு சேவைகளை, அளித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இ.மெயில் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடித்தில் கூறியுள்ளதாவது:-

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நடப்பு ஆண்டுக்கான வேலைக்கு ஆள் சேர்ப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகள் குறைவான அளவிலேயே உருவாக்கப்படும். எனினும் இந்தாண்டு பொறியியல், தொழில்நுட்ப பிரிவுகளில் ஆட்களை சேர்க்க கவனம் செலுத்தப்படும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.