உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க், இப்போது அவரது பிரதான டார்கெட்டாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். நான் மற்ற பணிகளை செய்வதில் மிகவும் பிஸியாக உள்ளேன். அதிபர் தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை அதிபராக ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. 2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது. அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், தற்போது வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என கூறியுள்ளார்.
“மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால், இப்போது அது நடக்காது. அதிபர் ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிபர் எந்த தவறையும் செய்யவில்லை. அதிபர் அண்மையில் அறிமுகம் செய்த மசோதா சிறந்த ஒன்று” என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார்.