பாகிஸ்தானில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 19 பெண்கள் பலி!

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த படகு இந்தோஸ் ஆற்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது, படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த 100 பேரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.