தெற்கு ஜப்பான் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை!

தெற்கு ஜப்பான் பகுதிகளில் எரிமலை பாறைகள் வெடித்து சிதறியதன் விளைவாக 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தெற்கு ஜப்பானின் ககோஷிமா பகுதியில் உள்ள சகுராஜிமா எரிமலையில் நேற்று நள்ளிரவு திடீரென வெடித்தது. இதில் பாறைகளும் வெடித்து சிதறி தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. பெரிய எரிமலையில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதேசமயம் இதனால் எழும் புகை சுமார் 250 மீட்டர் உயரத்திற்கு எட்டியுள்ளது. இதன் காரணமாக, சகுராஜிமாவின் எரிமலை பள்ளத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிமுரா மற்றும் ஃபுருசாடோ நகரங்களின் குடியிருப்புவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ககோஷிமா பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறும்படியும் அரசு அறிவித்துள்ளது.

பூகோள அமைப்பின்படி ஜப்பானில் இயற்கையாகவே எரிமலைகள் அதிகம். இதன் காரணமாக எரிமலைகள் வெடிப்பது அந்நாட்டு மக்களுக்கு மழை, வெள்ளம் போல பழகிப் போன விஷயம்தான். எரிமலை வெடிப்பது குறித்த அபாய எச்சரிக்கை வந்தால் தங்களையும், தங்களது உடைமைகளையும் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து அந்நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு பயிற்சி அளிக்கிறது. இதேபோன்று எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருப்புகளும் டென்ட், காட்போர்டு அட்டை போன்ற எளிதில் இடமாற்றம் செய்யும் விதத்திலேயே அமைக்கப்படுகின்றன.