மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்யா கைப்பற்றியது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கி கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார்

ரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிட்ட நிலையில், மரியுபோலில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என உக்ரைன் முன்மொழிந்ததை அடுத்து, உக்ரைன் வீரர்கள் ஆயுதங்கள ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ரஷ்யா முன்னதாக எச்சரித்திருந்தது.

ரஷ்யப் படைகள் முக்கிய எதிர்ப்பு கோட்டையான மரியுபோல் நகரை இன்றே கைப்பற்றும் என்று அதிபர் விளாடிமிர் புடின் நிர்வாகத்தில் உயர்மட்ட அதிகாரி ஒருவர், முன்னதாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எட்டு வாரங்களுக்கு முன்னால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து, பெரிய அளவில் ரஷ்யாவால் எதையும் முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரியுபோலில் உள்ள மிக பெரிய எஃகு ஆலையான அசோவ்ஸ்டல் (Azovstal) ரஷ்ய கூட்டமைப்பின் படைகளின் கட்டுப்பாட்டில் சென்ற நிலையில், அதனை தகர்க்காமல் முழுமையாக கைப்பற்றுமாறு வீரர்களுக்கு ஏற்கனவே புடின் உத்தரவிட்டிருந்தார்.

ரஷ்யா தனது ராணுவ பலத்தினால் போர் தொடங்கிய சில நாட்களிலேயே உக்ரைனை கைப்பற்றி விடும் என சில இராணுவ துறை நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில், கிட்டதட்ட இரு மாதங்களுக்கு பிறகு ரஷ்ய தரப்பில் இருந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போரினால், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். நகரங்கள் இடிபாடுகளாக மாறியது.