கால்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்!

கால்களில் வலி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். வலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. பாதங்களின் வண்ணம் மாறுகிறதா? தட்ப வெப்பம் எப்படியிருக்கிறது? பாதங்களில் வெடிப்பு, கீறல் இருக்கிறதா? உள்ளங்கால்களில் தோல் உறிகிறதா என்று அடிக்கடி கால்களை கவனித்து கொள்ள வேண்டும்.

கொப்புளம், சேற்றுப்புண் இருந்தால் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. கால்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கால் விரல்களின் நடுவில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். கால் நகங்களை, சீராக வெட்ட வேண்டும். நகங்களின் ஓரங்களை வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகம் வளர்வதற்கு தடையாக இருக்கும்.

பிளேடு, கத்தரிக்கோல் பயன்படுத்தாமல், நகம் வெட்டியை பயன்படுத்துவது நல்லது. கால்களை, சோப்பு போட்டோ அல்லது 2-3 சொட்டு நோய்க் கிருமி எதிர்க்கும் திரவத்தை தண்ணீ­ரில் கலந்தோ கழுவலாம். சிலர் வெறும் காலோடு நடப்பர். வெறும் காலோடு நடப்பதன் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. செருப்பு போடும் போது, வெயிலைத் தடுக்கும் கிரீமை கால்களில் தடவ வேண்டும்.

கால்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்போர், வருடத்திற்கு ஒரு முறை போடியாட்ரிக் மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டு, மிகப்பெரிய நோயை உண்டாக்கும்.

கால்களில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு:

மழைக்காலங்களில்தான் கால்களில் சேற்றுப் புண் ஏற்படும். ஈரமான செருப்பு மற்றும், ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை, ஈரமான பாதம் காரணமாக கால்களின் பாதங்களை பூஞ்சை பாதிக்கும். கால் விரல்களின் நடுவில் வெள்ளை நிறங்கள் ஏற்படுவது, உள்ளங்கால் கீறலாகவோ அல்லது கனமாகவோ இருப்பது, நகங்களில் நிறம் மாறுவது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

எப்போதும் பாதங்களை கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

அணிந்து இருக்கும்போது, பொது இடங்களிலோ அல்லது வீட்டிற்கு வந்து ஷூவை கழட்டும் போதோ, துர்நாற்றம் அடிக்கும். அத்துர்நாற்றத்தைத் தடுக்க என்ன செய்வது என்று பார்ப்போம்…

நறுமணம் இல்லாத நோய் எதிர்க்கும் சோப்பை பயன்படுத்தி, பாதங்களை கழுவ வேண்டும். பாதங்களை நன்கு காய வைத்தபின் ஷூவை போட வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தவுடனே, கால் கழுவ வேண்டும். டால்கம் பவுடர் போடலாம்.