கஞ்சா புகைத்தால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் – டாக்டர். லானி பர்க்மென்

கஞ்சா புகைக்கும் ஆண்களால் கருத்தரிக்க வைக்க முடியாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். டாக்டர் லானி பர்க்மென் என்பவர் தலைமையிலான குழுவினர் கஞ்சா புகைக்கும் ஆண்களின் விந்தணுக்கள் நீந்திச் செல்லும் திறன் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தினர்.

கஞ்சா புகைக்கும் ஆண்களின் விந்தணுக்கள் கண்மூடித் தனமான அதிவேக நீந்தும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. ஆனால் கருமுட்டைகளுடன் இணைந்து கருவுறுவதற்கு இந்த அதிவேகம் அனாவசியமானது. அதே நேரம் விந்தணுக்கள் ஸ்டாமினாவை இழந்து விடுகின்றன. மேலும் இத்தகைய விந்தணுக்கள் கருமுட்டைகளை நெருங்குவதற்கு முன்பாகவே எரிந்து போகின்றன. இதனால் கருத்தரிக்க முடியாமல் போகிறது.

கஞ்சா புகைப்பதால் உடலில் இயற்கையான சுழற்சி தன்மை மாறி விடுகிறது. கஞ்சாவில் உள்ள டிஎச்சி என்ற பொருள் தான் விந்தணுக் களின் கண்மூடித்தனமான இயக்கத்துக்கு காரணம். அதுபோல விந்தணுவில் உள்ள என்சைம் இடைவெளியை இந்த பொருள் சிதைத்து விடுகிறது. அதனால் கருமுட்டையை அடைவதற்கு முன்பாகவே விந்தணுக்கள் செயலிழந்து விடுகின்றன.

ஏற்கனவே கஞ்சா புகைக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல கஞ்சா புகைப்பதை நிறுத்தினாலும் கூட மேற்சொன்ன டிஎச்சி பொருள் உடலில் இருக்கும் கொழுப்புகளில் ஒளிந்து கொண்டு நீண்ட காலத்துக்கு தொல்லை கொடுக்கும். அதன் தாக்கம் குறைய நிறைய நாட்கள் பிடிக்கும். ஆகையால் கருவுற விரும்பும் ஆண்களும், பெண்களும் கஞ்சா புகைக்காமல் இருப்பதே சிறந்தது.