தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா: தனியார் மருத்துவமனை அறிக்கை!

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவரது மகன் மனோஜ் தெரிவித்தபோது, “நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவித்து இருக்கிறார்கள்.” என்றார். இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு பாரதிராஜாவை அவர் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் “என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், பாரதிராஜா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.