அனுஷ்கா பெயரில் 50 லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது!

நடிகை அனுஷ்கா சில காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது பெயரில் 50 லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கால்ஷீட்டை வாங்கித் தருகிறேன் என தயாரிப்பாளர்களை சில இடைத்தரகர்கள் ஏமாற்றுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படியொரு சிக்கலில் தான் தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர் ஒருவர் பணத்தை இழந்து விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா உடல் எடை அதிகரித்த நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகளும் எடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் தனது 48வது படத்தில் மாஸ்டர் செஃப் ஆக நடித்து வருகிறார் அனுஷ்கா.

இந்நிலையில், அவர் பெயரில் ஒரு பண மோசடி நடைபெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நான் தான் அனுஷ்காவின் மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு தெலுங்கு சினிமா மேனேஜரான எல்லா ரெட்டி தயாரிப்பாளர் லட்சுமணன் சாரி என்பவரை வசமாக ஏமாற்றி உள்ளார். அனுஷ்காவின் கால்ஷீட் வாங்கித் தருவதாகக் கூறி ஆசை காட்டிய நிலையில், தயாரிப்பாளர் லட்சுமணன் சாரி அவரை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார்.

நடிகை அனுஷ்கா மீண்டும் நடிக்கத் தொடங்கிய நிலையில், அவரை வைத்து புதிய படமெடுக்க நினைத்த தயாரிப்பாளருக்கு மேனேஜர் எல்லா ரெட்டி நல்லா அல்வா கிண்டிக் கொடுத்திருக்கிறார். அனுஷ்காவின் மேனேஜர் என்று பொய் சொல்லி 50 லட்சம் ரூபாயை ஆட்டைய போட்டிருக்கிறார் எல்லா ரெட்டி.

50 லட்சத்தை முதலில் கொடுங்க அடுத்த நாளே அனுஷ்காவை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருகிறேன் எனக் கூறி காசை வாங்கிக் கொண்டு போன் நம்பரையே எல்லா ரெட்டி ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டாராம். எல்லா ரெட்டி தன்னை ஏமாற்றிய விபரம் அறிந்த லட்சுமணன் சாரி இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார். எல்லா ரெட்டியிடம் இருந்து தயாரிப்பாளருக்கு பணத்தை மீட்டுத் தரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.