நடிகர் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது!

நடிகர் பிரசாந்துக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் தியாகராஜன். இவரது ஒரே மகன் பிரசாந்த். பிரசாந்த் தனது 17 வயதில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் நடிகர் பிரசாந்த். தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி. உனக்காக பிறந்தேன், எங்க தம்பி, திருடா திருடா, செந்தமிழ் செல்வன், ஆணழகன், மன்னவா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, காதல் கவிதை, பூமகள் ஊர்வலம், ஜோடி, ஹலோ, ஆசையில் ஓர் கடிதம், பார்த்தேன் ரசித்தேன், தமிழ், சாக்லேட், வின்னர், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரசாந்த்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதேபோல் சிம்ரன் பிரசாந்த் காம்போவும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளது. பிரசாந்துக்கு பெரும் ரசிகைகள் கூட்டம் இருந்தது. பிரசாந்த் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி தொழில் அதிபராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார் பிரசாந்த். சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் பிரசாந்த், கடந்த 2005ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கிரக லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கிரக லட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 வயதில் மகன் இருந்த தகவல் பின்னர்தான் தெரிய வந்ததால் அவரை விவாகரத்து செய்தார் பிரசாந்த்.
​ அதன்பிறகு நடிகர் பிரசாந்த் இதுவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் படங்களிலும் அதிகம் நடிக்கவில்லை.

தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். அந்தகன் படம் இந்தியில் வெளியாக செம்ம ஹிட்டடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் பிரசாந்தின் அப்பாவான தியாகராஜன், பிரசாந்தின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது, அந்தகன் படம் வெளியான அடுத்த மாதமே நடிகர் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் என கூறியுள்ளார். பிரசாந்தின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் தியாகராஜன்.

மேலும் நடிகர் பிரசாந்த் காதல் திருமணம் செய்திருந்தால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்குமோ என்று தான் பலமுறை யோசித்ததாகவும் தெரிவித்துள்ளார் தியாகராஜன். விரைவில் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் என தியாகராஜன் கூறியிருப்பது பிரசாந்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.