‘விடுதலை’ ஒரு திரைக்காவியம்.. ரஜினிகாந்த் புகழாரம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
விடுதலை திரைப்படம் ஒரு திரைக்காவியம் என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன், ராஜீவ் மேனன், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் வெற்றி மாறன்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரயில் விபத்து காட்சி தத்ரூபமாக காட்சியாக்கப் பட்டுள்ளதாக சிலாகித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இதேபோல் நடிகர் சூரியின் நடிப்பும் கடின உழைப்பும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மனசை கசக்கி பிழிவதாக கூறி வருகின்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் விடுதலை திரைப்படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர், ‘விடுதலை.. இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பதிவு தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இதனிடையே ரஜினிகாந்தின் பாராட்டுக்களுக்கு நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி @rajinikanth #ViduthalaiPart1 என குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் சூரி.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் டுவிட்டை ரீடுவிட் செய்து நடிகர் சூரி பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், என்ன சொல்றதுன்னே தெரியலை தலைவரே.. நெஞ்சார்ந்த நன்றிகள்.. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்.. என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.