இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறையை உறுதி செய்த நீதிமன்றம்!

இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழங்கில் அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், தற்போது அந்த தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதிபடுத்தி இருக்கிறது.

மம்மூட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆனந்தத்தை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான், சண்டக்கோழி 2, வாரியர்ஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டுமின்றி இவர் திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி ஏராளமான படங்களையும் தயாரித்து வருகிறார். குறிப்பாக தீபாவளி, கும்கி, வழக்கு எண் 18 கீழ் 9, இவன் வேற மாதிரி, கோலி சோடா, மஞ்சப்பை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இவர் தயாரித்து இருக்கிறார்.

லிங்குசாமி இயக்கி தயாரித்த சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை தழுவியது. இதனால் பெரும் இழப்பை சந்தித்த லிங்குசாமிக்கு அடுத்த அடியாக அமைந்தது கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தம வில்லன் திரைப்படம். இதனால் கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவித்தார் லிங்குசாமி. இந்த நிலையில்தான் “எண்ணி ஏழு நாள்” என்ற பெயரில் புதிய படத்தை தயாரிப்பதற்காக பிவிபி கேப்பிடல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1.3 கோடியை கடனாக பெற்றது. அந்த திரைப்படத்தில் கார்த்தி, சமந்தா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு நினைத்தபடி நடைபெறவில்லை. கடைசியில் அது கைவிடப்பட்டது.

அதே சமயம் பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி வாங்கிய ரூ.1.3 கோடி கடனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திருப்பி செலுத்தவில்லை என்று கூறி அந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து லிங்குசாமி காசோலைகளை சமர்பித்தார். அதில் ரூ.35 லட்சத்துக்கான காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து லிங்குசாமி மீது பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன் வட்டியுடன் சேர்த்து கடனை செலுத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லிங்குசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.