இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் தனுசுடன் இணையும் வடிவேல்?

தனுஷை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் வடிவேலுவைகொண்டு வருவதற்கு மாரி செல்வராஜ் திட்டமிட்டிருக்கிறாராம்.

தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்திருந்தார். வெங்கி அட்லூரி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் பைலிங்குவலாக உருவாகியிருந்த அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பத்தை படம் கொடுத்ததாக ரசிகர்கள் கூறினர். இதனால் தனுஷ் தரப்பு கொஞ்சம் அப்செட் ஆனதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. வாத்தி படத்துக்கு அடுத்ததாக சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். பீரியட் படமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். வாத்தி படம் கொடுத்த தோல்வியால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் தனுஷின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி அந்தப் படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 15ஆவது படமாக இப்படம் உருவாகிறது. மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனையடுத்து அவர் வாழை என்ற படத்தை இயக்குகிறார். இயக்கத்தோடு மட்டுமின்றி டிஸ்னி ஹாட் ஸ்டாரோடு சேர்ந்து அந்தப் படத்தை நவி ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கவும் செய்கிறார். இப்படமானது சிறுவர்களுக்கான சினிமாவாக உருவாகிறது.

வாழை படத்தை முடித்துவிட்டு தனுஷுடனான படத்தை மாரி செல்வராஜ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஏற்கனவே விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியிருக்கிறார் மாரி. எனவே வாழை படத்தை முடித்த பிறகு துருவ் விக்ரமுக்கு படம் செய்துவிட்டுத்தான் தனுஷ் படத்துக்கு வருவார் என இப்போது கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷுடனான படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என மாரி செல்வராஜ் திட்டம் போட்டிருக்கிறார். அதற்காக நடிகர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க யோசித்திருக்கும் அவர், வடிவேலுவை இந்தப் படத்தில் கமிட்டாக்க முடிவெடுத்திருக்கிறாராம். மாமன்னன் படத்தில் பணியாற்றியபோது மாரி செல்வராஜுக்கும், வடிவேலுவுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டுவிட்டது. எனவே வடிவேலுவை இனி அதிகம் மாரி செல்வராஜ் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. தனுஷுடன் வடிவேலு இணைந்தால் அந்தக் காம்போ சிறப்பாக இருக்கும் தனுஷ் ரசிகர்கள் கூறுகின்றனர்.