ஏமாற்றி பொதுச் சொத்தை விற்றுவிட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர் அம்மா மீனாகுமாரி, சகோதரி ஐஸ்வர்யா, நயன்தாரா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்துவுடன் பிறந்தவர்கள் 9 பேர். திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சிவக்கொழுந்துவின் அண்ணன் மாணிக்கம், தம்பி குஞ்சிதபாதம். இதில் குஞ்சிதபாதம் தன் தண்ணன் மாணிக்கத்துடன் சென்று லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொது சொத்தை எங்களுக்கு தெரியாமல் சிவக்கொழுந்து விற்றுவிட்டார். அந்த சொத்தில் பல வில்லங்கங்கள் உள்ளது. எங்களின் பொது சொத்தை விற்பனை செய்த கிரைய பத்திரத்தில், மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதாவது வில்லங்கம் ஏற்பட்டால் தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துக்கள் மூலமாக ஈடு செய்வதாக உறுதி அளித்து விற்பனை செய்திருக்கிறார். எனவே, பொது சொத்தை மோசடியாக விற்பனை செய்தது குறித்து சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவரின் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா, மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அதை மீட்டு எங்களுக்கு கிடைக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் குறித்து குஞ்சிதபாதம் கூறுகையில், என் இதயத்தில் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏழ்மையில் வாடும் என்னிடம் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. இதையடுத்து குடும்ப சொத்தை விற்று அதில் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கமாறு மாணிக்கம் அண்ணனிடம் கேட்டேன். ஆனால் அந்த சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து ஏற்கனவே மோசடியாக விற்று அண்ணன்கள், தம்பிகளை ஏமாற்றிவிட்டார்.
சொத்து தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சொத்தில் ஒரு பங்கில் தான் சிவக்கொழுந்துவுக்கு உரிமை உண்டு என்றும், மற்ற பங்குகள் 8 பேருக்கும் உரியது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. விக்னேஷ் சிவனும், அவரின் தாயும் உதவி செய்தால் தான் இந்த பிரச்சனை தீரும். எனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் சொத்தை விற்பனை செய்ய விக்னேஷ் சிவன் உதவி செய்ய வேண்டும் என்றார்.
குஞ்சிதபாதத்தின் மனைவி சரோஜா கூறுகையில், என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. எங்களுக்கு உதவ யாரும் இல்லை. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் என் கணவரின் உயிரை காப்பாற்ற சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்றார். இந்த புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
